Wednesday, April 22, 2009

விவாதங்கள் ஆரோகியமானதாக இல்லை.தொடராதீர்.

நவீனுக்கும் ,பாலமுருகனுக்குமிடையே நடக்கும் இந்த விவாதத்தில்( ஆரோகியமான வார்த்தையைப் பயன்படவைக்கிறது வயது) பங்குபெற எனக்குக்கொஞ்சமும் விருப்பமில்லை. இது போகும் திசை இலக்கற்றது.தார்மீகமற்றது.பாதகமான விளைவுகளை தன்வசம் கொண்டுள்ள ஒன்று.ஏனெனில் தனிமனித சிறுமைகள் சினத்தின் அடிப்படையில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.எல்லாமும் முடிந்து கோபம் இறங்கி ஏதாவது ஒரு நாளில் இருவரும் கைகுலுக்கிக்கொள்ளக்கூடும்.கட்டிப்பிடித்து மன்னிப்புக்கேட்டுக்கொள்ளவும் கூடும்.கைகுலுக்கிகொள்வதும் மன்னிப்புக்கேட்டு கட்டிப்பிடித்துக்கொள்வதும் மனித இயல்பு.கைகுலுக்கிக்கொள்வதற்கும் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதற்குமான உணர்வு ,ஒருநாள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ‘எதற்கு சண்டையிட்டோம்' என்ற வினாவோடு நம்மை திரும்பிப்பார்க்கும்?அப்படி எதிர்நோக்கும்போது இப்போதுள்ள கோபத்தை மிஞ்சிய வெட்கம் சூழக்கூடும். குறிப்பாக எழுத்தாளர்களுக்கு இதனை சொல்லவேண்டிய அவசியமில்லை.

எனக்கு நவீனும் பாலமுருகனும் நன்கு பழக்கமானவர்கள்.என்னவிட வயதில் சிறியவர்கள் என்பதைவிட இலக்கிய படைப்பில் மிஞ்சிவிடக்கூடியவர்கள் அவர்கள் மீதான் என் மதிப்பை வைத்திருப்பவன். நவீன் spm முடித்த கையோடு என்னைப்பார்க்க வந்தார்.இலக்கியம் ,சமயம் பற்றிய வினாக்களும் சந்தேகங்களும் நிறைந்தவராக.அப்போதுதான், ‘என் கவிதைகள் நயனத்தில் பிரசுரிப்பதில்ல. நீங்கள் நயனத்துக்குச் சொல்லுங்கள்,’ என்று கேட்டார். அப்போதே அவர் எழுதும் கவிதைகள் அவரின் வயதைக்கடந்த(18/19) முதிர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. இதற்குச்சிபாரிசு தேவையில்லை என்று எனக்கு நன்றாகவே புரிந்திருந்தது.நான் சிபாரிசு தந்தால்தான் கவிதை பிரசுரமாகும் என்ற நிலைக்கு நயனம் இருந்ததும் இல்லை. புதிதாக எழுதவருபவர்க்குள்ள அவசரம் அவரிடமுமிருந்ததால், நான் ஒரு கடிதம் எழுதி அவரிடமே கொடுத்துவிட்டேன்.அதிலும் நயனம் புதுக்கவிதைகளுக்குச் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுக்கும் நிலையில் நல்ல கவிதைகளுக்கான களத்தை தாராளமாகவே விரித்துவைத்திருந்தது.‘நவீன் என்னைக் கெஞ்சினார்' என்ற வார்த்தைப்பிரயோகம் ஒருவருக்கு இன்னொருவர் மேல் உண்டான அனாவசிய கோபத்தால் வந்தது.இதனைத்தவிர்த்திருக்கலாம்!

நவீனிடம் நான் பார்த்த எழுத்து அங்கீகாரம் சார்ந்த அவசரத்தைப் பாலமுருகனிடமும் நான் பார்க்கிறேன்.இதில் தவறேதும் இல்லை.யாருக்கு அங்கீகாரம் தேவையில்லை?மனித இயல்பு இது.(நடக்கப்பழகும் குழந்தைகூட கைத்தட்டலை எதிர்பார்க்கிறது)எல்லாருக்கும் அவருடைய ஆற்றலின் வெளிப்படுதலுக்கு ஏற்ற அங்கீகாரத்தை இந்த உலகம் வைத்துக்கொண்டு கொடுக்கக்காத்திருக்கிறது-பாராபட்சமின்றி. பாலமுருகனின் எழுத்து மலேசிய எழுத்து வகையிலிருந்து பெரிதும் வித்தியாசமானது. வாசகனை விரைந்து சேரும் போக்குடையது.இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல!ஆரோக்கியமற்ற விவாதத்தினால் நல்ல இலக்கியம் படைப்பதில் சற்று தேக்கம் உண்டாகலாம்.அதுவே சறுக்கியும் விடலாம்.வழுக்கலான நடைபாதையை நம் ஏன் ஏற்படுத்தவேண்டும்.தேவையற்ற உக்கிரத்தால் எழுத்தை விட்டுச்சென்று திரும்ப வராதவர் பட்டியல் நீளும்.இப்படி எவ்வளவு இழந்திருப்போம் நாம்!

இருவருக்கும் நான் என் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.இந்த மின் ஊடகப்போரைத்தொடராதீர்கள்.இருவருமே கெடா மாநில பூர்வீகத்தைக்கொண்டவர்கள். நல்ல எழுத்துப்பாரம்பர்யத்தைக் கொண்ட மாநிலம் என்ற பெயர்(தற்செயலாகவும் இருக்கலாம்) எடுக்கும் ஊர்.சமீபமாக இலக்கியவாதிகள் நல்ல சண்டையிட்டுக்கொள்ளும் ஊர் என்ற பெயரையும் எடுத்து வருகிறது.நல்ல இலக்கியம் உங்கள் இருவரிடமும் இருந்து தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கை என்னிடமும், இலக்கிய விரும்பிகளிடமும் உள்ளது. கண்டிப்பாய் வரும், இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது தேவையற்றது என்று தவிர்க்கும்போது.

நன்றி,
கோ.புண்ணியவான்
Ko.punniavan@gmail.com

No comments:

Post a Comment