Thursday, February 12, 2009

ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி கேலிக்குரல்



'நந்தா' திரை படத்தில் சூரியாவிடம் ராஜ்கீரன் நன்றாக தண்ணி அடித்தபடி உணர்ச்சிப்பொங்க சொல்வார் 'நாமெல்லாம் கடவுளுக்குச் சமமானவர்கள்.யாரையும் கொல்ல உரிமை உண்டு'.அதைக்கேட்கும் போது சூரியாவின் கண்களில் உணர்ச்சி பொங்கும்.மிகத்துரிதமாக எதிரிகளை விளாசு விளாசு என விளாச கிளம்பிவிடுவார்.இந்த ஒரு வரியை ஒரு படம் முழுவது சொல்ல பாலா இத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டாம்.

சிறிய வயதில் காசியில் விட்டுச்செல்லும் தன் மகனை தேடிச் செல்கிறார் தந்தை.ஆர்யா ஒரு சித்தனாக ருத்திரனாக காட்சி கொடுக்கிறார்.தன் மகனை அடையாளம் கண்டு கொண்ட தந்தை அவனை வீட்டிற்கு அழைக்கிறார்.குருவின் ஆசியோடு ஆர்யா ஊருக்கு திரும்புவதும் அங்கே ஊனமுற்றவர்களை பிச்சைவாங்க வைத்து வயிறு வளர்க்கும் கூட்டத்தினரை அழிப்பதும் மீதிக்கதை.

படத்தில் வசனம் ஜெயமோகன்.'விஷ்ணுபுரம்' 'பின் தொடரும் நிழலின் குரல்' போன்ற தடித்த புத்தகங்கள் எழுதிய அதே ஜெயமோகன்.ஒரு A4 காகிதத்தில் அடங்கும் அளவுக்கு அடக்கமாக வசனம் எழுதியுள்ளார்.படத்தில் அவரது பங்களிப்பு வெரும் வசனத்தோடு இருந்திருக்கும் என்பது சந்தேகம்தான்.தனது 'ஏழாம் உலகம்' நாவலை மையமாக வைத்து நகர்த்தப்படிருக்கும் திரைக்கதையில் அவரது பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும் என நம்பலாம்.அவர் 'ஆமாம்' என பெருமை படவும் பெரிதாக ஒன்றும் திரைக்கதையில் இல்லை என்பது வேறு விஷயம்.ஏழாம் உலகத்தின் நிழலைக்கூட பாலாவின் கடவுள் நெருங்கவில்லை.

அறிவாளிகள் அதிகம் சிந்திக்கக்கூடாது என்பதை முதலில் உணர்த்தியவர் கே.பாலசந்தர் பிறகு மணிரத்தினம் இப்போது பாலாவும் அதில் சேர்ந்து கொண்டிருக்கிறார்.ஊனமானவர்களைத் தேடிப்பிடித்ததும் இரண்டு மூன்று வருடங்கள் சிரமப்பட்டு அவர்களை நடிக்க வைத்தது என எல்லாம் சரி...இத்தனை உழைப்பும் எதற்கு?மீண்டும் தமிழ்ப்படத்திற்கே உரிய கதாநாயக கூஜாவை தூக்கிப்பிடித்து காட்டுவதற்குதான்.ஒன்றும் அறியாத அப்பாவி மக்களுக்காக போராட திடீரென தோன்றும் ரஜினியையும் விஜயகாந்தையும் அர்ஜூனையும் போலவே ஆர்யாவும் வடிவமைத்திருக்கிறார் பாலா.மக்கள் பிரமிக்க வேண்டுமே! இருக்கவே இருக்கிறார்கள் காசியில் சித்தர்கள்.அதிக தாடி ஸ்டைலான முடி மிரட்டும் பார்வை.நடக்கும் போதும் பார்க்கும் போதும் உயிரோட்டமான இளையராஜாவின் பின்னனி இசை.முடிந்தது. ரசிகர்களும் உலக திரைப்படதின் போஸ்டர்களைக்கூட காணாத விமர்சகர்களும் பாராட்ட அது போதும்.

படத்தில் இரண்டு கதைகள் ஒன்றாக நகர்கின்றன.முதலில் ஆர்யாவின் வாழ்வு மற்றது 'உருப்படிகளின்'(கதைப்படி) வாழ்வு.இவை இரண்டில் ஒன்றை உருப்படியாக சொல்ல முயன்றிருந்தாலும் படம் மனதில் நின்றிருக்கும்.சிறுவயதிலிருந்தே காசியில் உள்ள ஒரு பிரிவு சாமியார்களோடு தன்னை ஒரு கடவுளாக எண்ணி வாழும் ஒருவன் தனது குடும்பத்தில் இணையும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அதன் பலகீனங்களோடு சொல்ல முயன்றிருக்கலாம்.(அப்படியும் இல்லை.ஆர்யாவை சிவனுக்கு ஒப்பாகப் பேசுகிறார் அந்த ஊர் சாமியார்.)அல்லது அங்கவீனர்களின் வாழ்வை கொச்சைப்படுத்தாமல் 'பிதாமகனில்' சம்பந்தமே இல்லாமல் சிம்ரனை பழைய பாட்டுக்கு ஆடவிட்டு பணம் பண்ணியது போல இதில் திருநங்கயையும் போலி எம்.ஜி.ஆர் சிவாஜியையும் ஆடவிடாமலாவது இருந்திருக்கலாம்.குறைந்த பட்சம் எந்தக் கதாநாயகனும் வந்து காப்பாற்றாமல் அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் படியாவது இருந்திருக்கலாம்.அப்படி அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள முடியாத பாவப்பட்ட ஜென்மங்கள் என பாலா அறிவாளித்தனமாகப் பேசினால் அவர்களைத் தற்கொலை செய்யவாவது வைத்திருக்கலாம்.பாலாவின் கூற்றுப்படி(சித்தர்களின் கூற்றாம்) வாழமுடியாதவர்களை கொல்வது தர்மம் என்றால் அவர்களே தற்கொலை செய்து இறப்பதும் தர்மமாகியிருக்கும்.அது வில்லனுக்கு தண்டனையாகவும் இருந்திருக்கும்.

இதையெல்லாம் விட்டு விட்டு பலவீனமானவர்களை பலவீனமானவர்களாகவே காட்டும் போக்கும்...ஒரு சமூகத்தின் பகுதியை காப்பாற்ற இன்னமும் திடுதிப்பென ஒரு தனி மனிதன் தோன்றுவதும் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய கேலிக்குரலாகவே கேட்கிறது.

பலவீனமானவர்கள் இன்னமும் கதாநாயகர்களுக்குக் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

'அப்படியெல்லாம் இல்ல சார்.பாலா படத்த நல்லா தான் எடுத்திருப்பாரு.சென்சார்ல வெட்டிடதனால படம் இப்பிடி ஆச்சி' என பாலாவின் ரசிகர்கள் சப்பை கட்டலாம்.நியாயம்தான்.

இன்னும் சிலர் 'பாலா இந்தப்படதுல கடவுள் இல்லனு சொல்ல வரார்.அத சரியா சொல்லல' என்றும் கூறலாம்.

என்னைப்பொறுத்தவரை இதில் எனக்கு கடவுளோ கலையோ மயிரோ முக்கியம் கிடையாது.மனிதன் தான்.

ம.நவீன்

வேதாளம் சொன்ன கதை


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் வேதாளத்தைத் தூக்கித் தோள்மீது போட் டான். எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரனின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் சிக்கிச் சின்னா பின்னமாகிய வேதாளம் அப்போதுதான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. விக்ரமாதித்தனின் தொல்லை தாங்காமல் வேதாளம் கடுப்பாகிக் கதை கூறத் தொடங்கியது...

விக்ரமாதித்தனே உன் முயற்சியை மெச்சினோம். ஆனா, இப்படித் தூங்கும்போது தொந்தரவு பண்றதுதான் உங்கிட்ட எனக்குப் பிடிக்காத பழக்கம். என்னை மட்டுமல்ல இந்தச் சமுதாயத்தையும் நீ எழுப்ப நினைச்சா, நீ ஐ.எஸ்.ஏ வுல உள்ள போறது திண்ணம். அதனால, யாரையும் எப்பவும் எழுப்ப முயற்சி பண்ணாத. முடிஞ்ச வரைக்கும் தமிழ்,இலக்கியமுன்னு பேசி பணம் சம்பாரிச்சிக்கோ. ஆனா, உம்மவன மட்டும் தமிழ்ப் பள்ளியில போட்டுறாத. ஒரு நல்ல தலைவராக இதுதான் முதல் குணம்.

உனது முயற்சி உன்னதமானதா உருப் படியற்றதா என இன்றளவும் எமக்கு புலப்பட வில்லை. எது எப்படி இருந்தாலும் தொடர்ந்து முயன்று தங்களை வெட்கங்கெட்டவர்களாகவும் வேடிக்கையாளர்களாகவும் பண அரசியல் செய்பவர்களாவும் பவனி வரும் ஒரு சிலரின் கதையைத்தான் இன்று கூறப் போகிறேன்.

எந்தச் சமுதாய விழிப்பும் அற்றுப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு களமாகப் புத்தகவெளியீடுகளும் அதைச் சார்ந்த சடங்குகளும் மாறிவிட்டன. யாரை அழைத்தால் அதிக பணம் கறக்கலாம் என்று இரவு பகலாகத் திட்டமிட்டு, ஒரு பட்டியல் தயாரித்து, பணம்,பதவியின் பின் நாக்கைத் தொங்க போட்டு ‘லோ லோ‘ என அழையும் கூட்டம் அதிகரித்து விட்டது.

இவர்களில் இரண்டுபட்டுக் கிடக்கும் இந்திய சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில் ஒரே மேடை யில் டத்தோ சிரி சாமிவேலுவையும் டத்தோ சுப்ராவையும் வைத்துப் புத்தக வெளியீடு செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரனின் சாதனையைப்பற்றிதான் நான் கூறப் போகிறேன். அதற்கு முன் இந்திய சமுதாயம் பிரிவதும் இணைவதும் இவர்கள் இருவரின் கையில்தான் இருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கும் அல்லது மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் இத்தகையதொரு இணைவை எண்ணி எண்ணி புளங்காகிதம் அடைந் துள்ளது, எப்போதும் போல இப்போதும் வியப்பைத் தரவில்லை. இந்திய சமூகத்தின் ஒற்றுமை டத்தோ சுப்ராவின் ஜால்ரா பத்திரிகை மற்றும் டத்தோ சிரி சாமிவேலு இல்லம் இருக்கும் ‘ஜாலான் ஈப்போவில்’தான் இருக்கிறது என்பது இவர்களின் எண்ணம்.

இனி இராஜேந்திரன் கதைக்கு வருவோம்... வானம்பாடியில் ஆதி.குமணனோடு இணைந்து நடமாடத் தொடங்கிய காலம் தொடங்கி எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயலாற்றத் தொடங்கியது வரை ஆதி.குமணனுக்குச் செயலாளராக மட்டுமல்லாமல் சில சமயங்களில் செருப்பாகக் கூட உழைத்துள்ளார் என்பது ஊரறிந்த உண்மை. பின்னர், டத்தோ.சுப்ராவுக்குத் துடுப்பாகவும் பணியாற்றி வெள்ளை ஜிப்பா, வெள்ளை கால்சட்டை, வெள்ளை சிலிப்பர் என வெள்ளை மனது காரராகவே பவனி வந்து இன்று எழுத்தாளர் சங்கத்தின்
தலைவர் பதவியின் வழி தமிழகத்திற்கு அடிக்கடி மலிவான விலையில் பயணச்சேவையையும் வழங்கி வருகிறார் என்பது அவரது கூடுதல் சிறப்பு. தான் எழுத்தாளர்களை அழைத்துச் செல்வதாகக் கூறிக் கொண்டாலும் யார் அந்த எழுத்தாளர்கள் என இன்றளவும் கண்களில் காட்டாமல் ஒரு மாயஜால மன்னனாகவும் சிறந்து விளங்குகிறார். (சென்றவர்கள் அனைவரும் எழுத்தாளர்களா?) எதையும் காலம் அறிந்து செய்யும் திறமை பெற்ற அவர் சாமி வேலுவும் சுப்ராவும் இணைந்த ஒரு தினத்தில் ‘இதுதாண்டா சமயம் தில்லாலங்கடி டோய்..’என இருவரையும் இணைய அழைத்து, உடன் இரண்டு பேரின் நட்புறவுகளையும் கூட்டி முத்தாய்ப்பாய் ஜிகினா கவிஞர் வைரமுத்து வையும் வரவைத்து மூக்கின் மேல் மட்டும் அல்லாது அதன் உள்ளேயும் விரலை வைத்துவிட்டார். இராஜேந்திரனின் இந்த வணிக உத்தி அதிசயிக்கத்தக்கதாக உள்ளது.பெரும் வணிகர்களெல்லாம் கையாளாத நுட்பமான இம்முறையின் பயன்பாட்டினால் வணிகத் துறைக்கான ஏதாவது ஒரு பட்டத்தை வழங்கவேண்டும். (அதையும் அவரே தயார் செய்து தனக்குத்தானே கொடுத்துக் கொள்வார்.) திரும்பவும் இந்த இரண்டு சமுதாயத்தை இணைக்கும் சக்திகள் பிரிந்துவிட்டால் லாபம் குறைந்து விடும்... பின்னர், தேசிய தலைவரின் சொல் கேட்டு நடக்கும் தொடழிலதிபர்களையும் அழைக்க முடியாது என மிகத்துரிதமாக அவரது தமிழகப் பயணக் கட்டுரையைப் புத்தகமாக்கி வெளியீடு செய்து பெரும் கூட்டத்தைத் திரட்டிய அவருக்குத்தான் வைரமுத்து ஒரு வாழ்த்துப் பா இயற்ற வேண்டும்.

இதையெல்லாம் விட மிகத்தடிமனான, பார மான அவர் மனைவியின் கவிதை ஆய்வு நூலுக்கு மாணிக்கவாசக விருதினை வழங்கச் செய்தது அவரும் சாமிவேலுவின் பாதையில் ‘என்னை யாருடா கேள்வி கேட்க முடியும் ?’ என நெஞ்சு நிமிர்த்தி நடைபோடும் காட்சியைக் கண் முன் கொண்டு வருகிறது. அந்த நூலுக்கும் பரிசு கொடுத்த ஆய்வாளர்களின் இலக்கிய அறிவினை என்ன சொல்லிப் பாராட்ட... அதுவும் எதன் அடிப்படையில் அந்த நூலுக்குப் பரிசு கிடைத்தது என்றோ வேறு எந்த நூற்கள் அந்தப் போட்டிக்குச் சென்றன என்பது குறித்தான இரகசியங்களும் இன்னும் வெளிவந்த பாடில்லை. (ஒரு வேளை புத்தகத் தின் பாரத்தை நிறுத்துப்பார்த்து விருதினைக் கொடுத்துவிட் டார் களோ எனச் சில எழுத்தாளர்கள் இப்போதே மொத்தமான நூல் களைத் தயார் செய்யத் தொடங்கி விட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.)

ஆக மொத்தத்தில் ம.இ. காவை தனது தனிச் சொத்தாகக் கருதி கையாலும் சாமிவேலுவும் எழுத்தாளர் சங்கத்தைத் தனது தனிச்சொத்தாக எண்ணி பவனி வரும் இராஜேந்திரனும் இந்நாட்டின் சுரண்டலுக்கான இரண்டு கண்கள்.

விக்ரமாதித்யனே...இப்போது சொல்.இதில் யார் வெட்கங்கெட்ட வெங்காயங்கள்? சுய கொள்கையற்று எந்த நேரமும் ஓர் அரசியல்வாதிக்கு கூஜா தூக்குபவர்களா? பெரிய ஆய்வாளர் தோரணையில் ஒன்றும் இல்லாத படைப்புக்கு பரிசு கொடுப்பவர்களா? நல்லா நாக்கைப் புடிங்கிக்கிற மாதிரி திட்டிக்கொண்டு சமுதாய ஒற்றுமைக்காக இணைந்தேன் என அறிக்கை விடுபவர்களா?

அரசியலிலும் இலக்கியத்திலும் மலேசியத் தமிழர்களின் அவல நிலை கேட்டு வெகுண்டெழுந்த விக்ரமாதித்தன் மூன்று எழுத்துக் கெட்ட வார்த்தையில் திட்ட அவன் மௌனம் கலைந்தது.வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி குறட்டை விடத் தொடங்கியது நம்மைப்போலவே...

லும்பன்