Monday, April 6, 2009

முகமூடிகள் உலகம்

அஞ்சடிக்காரர்களுக்கு வணக்கம்.

நலம்.நலமறிய ஆவல்.

இன்று உலகம் திருட்டு உலகமாகி விட்டது.போலிகளின் உலகமாகி விட்டது.முகமூடிகளின் உலகமாகி விட்டது.எழுத்தாளர்கள் நல்லவர்களா என்ற கேள்வி எழுமானால் நிச்சயம் சொல்லலாம் அனைவரும் நல்லவர்கள் இல்லை என்ற மிக எளிதான பதிலை... எந்த எழுத்தாளர்கள் நல்லவர்கள் என்றால் இவர்கள்தான் என மிக அப்பட்டமாக எவரையும் சுட்ட முடியாது. ஏனெனில் ஏற்கனவே கேவலத்தின் கேவலமாகி விட்ட இந்த உலகம் புதிதாக வேறு மேலும் கேவலமாகிக் கொண்டிருக்கிறது.

ஒருவரின் கேள்விக்கு அவர் இல்லாமல் இன்னொருவர் பதில் சொல்வதே அநாகரீகம் என்றாகி விட்ட நிலையில், அவருக்கான கேள்வியை அவர் இன்னொருவரின் பெயரில் பதில் சொல்லி, பின்னர் மூலக் கேள்வியைக் கேள்வி கேட்பதுமிகவும் மலிவானது. இவை எல்லாம் மிகவும் அடிப்படையான தத்துவங்கள்.

இந்த கருத்தோடு நாம் அஞ்சடி முன்வைக்கும் ஒரு முக்கிய விவகாரத்தை விவாதிக்கலாம். வெவ்வேறு பெயரில் ஒரேநபர் எதிர்வினை ஆற்றுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆனால் அள்ளி வீசும் வெறும் குற்றச்சாட்டுகளால் மட்டும் ஓர் எழுத்தாளரை அதுவும் இதில் சம்பந்தப்பட்டுள்ள பாலமுருகன் போன்று ஆளுமை படைத்தவர்களை வெல்ல முடியாது.யார் யார் பெயரில் எல்லாம் எழுகிறார்கள் என்பது முக்கியமான ஒன்றல்ல. அவ்வகை பதில்களுக்கு எதிர்வினை ஆற்றாது புறக்கணிப்பதைத் தவிர வேறு சிறந்த எதிர்வினை இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு.

இதில் எல்லையைக் கிழித்து ஆய முற்படுகிறார்கள் சில முகமூடி பையல்கள். படைப்பை அல்லது நேர்மையான விமர்சனத்தை முன்நிறுத்துபவர்களுக்கே மதிப்பு.

இங்கு விவாதம் செய்ய எனக்குத் தெரிந்து அனைவரும் தயார்.ஆனால் முகமூடிகளை கழற்றி எறிந்து விட்டு,துணிச்சலுடன் வந்தால் மட்டும் போதும்.

சாரங்கன் என்பவர் யார் ? சீ.முத்துசாமி அவர்களை விமர்சிக்கும் போது மட்டும் இந்த பெயர் எப்படி உதிக்கிறது? படைப்பு ரீதியாக இவரை நாம் இதுவரை சந்தித்ததில்லை.படைப்பாளி என்ற நிலையில் இல்லாமல், தீவிர விமர்சகர் என்றால் இதுவரை, இத்தனை காலம் எங்கு ஒளிந்து கொண்டு எதை எழுதிக் கொண்டிருந்தார்? சுங்கை சிப்புட் என்று சொல்கிறீர்கள்.நானும் உங்கள் ஊர்தான்.21 ஆண்டுகாலம் வாழ்ந்தேன் டோவன்பி கித்தா காட்டில். இன்று தலைநகர் காட்டில். எனது அப்பா அம்மா இன்றும் அங்குதான் இருக்கிறார்கள். 21 வயதில் காணமல் போன சிவம் என்ற சிவா அங்குதான் இன்னமும் அலைந்துக் கொண்டிருக்கிறான். சுங்கை சிப்புட்டில் இவ்வளவு தீவிர எழுத்தாளர் இருக்கிறார், அவர் அடுத்தவரைக் குறிப்பாக இந்நாட்டின் எழுத்துலக முன்னோடியும், எனக்கு மிகவும் பிடித்தவருமான ( என்னைப் போன்று பலருக்கும் அவரைப் பிடிக்கும், அவருக்கு என்னைப் பிடிக்குமா என்றெல்லாம் சத்தியமாகத் தெரியாது) சீ.முத்துசாமி அவர்களைப் பற்றி மட்டும் அங்கலாயிக்கும் விமர்சகராக இருப்பது ஒருவகையில் பெருமைதான். சீ.முத்துசாமி சார் உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வைத்தவர்..குறிப்பிட்ட ஓர் எழுத்தாளருக்கு மட்டும் விமர்சகராக இருப்பது எழுத்தாளனுக்கு கிடைத்த பாக்கியம்தானே...

சாரங்கன் நீங்கள் யார் ? என்னைத் தெரியுமா ? சுங்கை சிப்புட்டில் எந்த இடம் ? சுங்கை சிப்புட் என்றால் முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாரே டத்தோ ஸ்ரீ சாமிவேலு, அவர்களின் தொகுதிதானே...அதுதான் வட சுங்கை சிப்புட்... எழுத்தாளர் பூ.அருணாசலம் சங்கநதி ( sungai = நதி siput = சங்கு ) என்றுதான் எழுதுவார்... அந்த ஊர்தானே. ஏனென்றால், தென் சுங்கை சிப்புட் என்று ஓர் ஊரும் உண்டு வெள்ளி மாநிலத்தில்.

நீங்கள் தீவிர விமர்சகராக இருக்கும் போது, ஏன் சீ.முத்துசாமி அவர்கள் பற்றி மட்டும் எழுத விரும்புகிறீர்கள். அவ்வளவு காதலா ? என்போன்று வளரத் துடிக்கும் பாலக எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்தும் விமர்சிக்கலாமே...நான் தயாராக இருக்கிறேன். என்னை விமர்சித்தால் அது எனது பாக்கியம் அல்லவா ? அல்லது சுங்கை சிப்புட்டில் தாமான் துன் சம்பந்தனில் ஏதாவது ஒரு கடையில் உங்களின் தரிசனத்துக்கு வாய்ப்பு அளியுங்கள். மகிழ்ச்சி அடைவேன்.

குமார், அந்தோணி என புதிய இணைய எழுத்தாளர்களைச் சந்திக்கும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் தீவிரமாக விவாதிப்பதற்கு உங்களைப் போன்ற புதிய அசல் ரத்தங்கள்தான் தேவை இன்றைய தேதிக்கு. நாம் இணையத்தில் மட்டுமே சந்தித்துக் கொண்டு, சண்டையிட்டுக் கொள்ளாமல், நேரடியாகவும் சந்தித்து, சி.கமலநாதன் கவிதைகள் முதல் பூங்குழலி கவிதைகள் வரை விவாதிக்க வேண்டும். கதை என்றாலும் சம்மதம்தான். ரெ.கார்த்திகேசு கதைகள் முதல் கே.பாலமுருகன் கதைகள் வரை விவாதிக்கலாம். ரெ.காவின் 'மகேஸ்வரியின் பிள்ளை' எனக்கு அவர் கதைகளில் பிடித்தமான கதை.பாலமுருகனின் கதைகளும் பிடிக்கும்.ஆகக் கடைசியாக அவரது 'பிற்பகல் வெயில்' வாசித்தேன். நுட்பமான அக்கதை குறித்து அவரிடமும் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் உண்மை இதுதான். தீவிரமாக, நேர்மையாக விவாதிப்பதற்கான கூட்டம் மிக சிறியது. யாரோ ஒரு பேரறிஞர் கூறியது போல், பத்து பேர்தான் இருப்பார்கள். சுற்றி சுற்றித் தேடுங்கள்...

மேலும் சிலவற்றைச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.ஆனால், நான் வல்லினத்துக்கு ஒரு கட்டுரை தர வேண்டும். அதை எழுதப் போகிறேன் இப்போது. அக்கட்டுரை நிறைவடைந்ததும் வருகிறேன் மீண்டும்.

நன்றி அஞ்சடி
பா.அ.சிவம்

No comments:

Post a Comment