Wednesday, July 22, 2009

கலை இலக்கிய விழா

இடைவேளையாக...


இன்று ஆஸ்ட்ரோ வானவில் போயிருந்தேன். கடுமையான காய்ச்சல் மற்றும் சளி. குளிர்சாதனதின் கடுமை மேலும் என் நிலையை மோசமாக்கியது. எப்படியோ ஒரு வழியாக 'கலை இலக்கிய விழா' குறித்து பேசிவிட்டேன்.வரும் வெள்ளிக்கிழமை 'விழுதுகள்' நிகழ்வில் ஒளிபரப்பாகும். இப்போது வரை என்ன பேசினேன் எனத் தெரியவில்லை. என் கவனம் முழுவதும் உட்கார்ந்திருக்கும் நாற்காலியிலேயே இருந்தது (மன்னிக்கவும் அந்த நாற்காலிக்கு நான்கு கால் இல்லை.)அது சுழன்று கொண்டே இருந்தது. ஏற்பாட்டாளருக்கு வேறு கோபம். நான் சரியாக அமரவில்லையாம்.கொஞ்சம் உடலை திருப்பினாலே ஒரு சுழற்று சுழற்றிவிடும் இருக்கையை சமாளிக்க மேசையில் கைகளை ஊன்றிக்கொண்டேன்.


வருகிற 29/8/09 கலை இலக்கிய விழா நடைப்பெறுகிறது. மொத்தம் 300 பேருக்கு மட்டுமே அனுமதி. இப்போதைக்கு 200 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இன்னும் 100. நண்பர்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். ஒரு டிக்கெட் விலை 50.00 ரிங்கிட். இது உணவு மற்றும் 3 புத்தகங்களின் விலையையும் அடக்கியது. முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.



'அங்க போய் வாங்கிக்கலாம்' என எண்ணியிருந்தால் மன்னிகவும். அதற்கான வாய்ப்பு இல்லை. டிக்கெட்டுகள் இல்லாதவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை. இந்நிகழ்வில் ஓவியர் சந்துருவின் ஓவிய கண்காட்சியும்,சிங்கை இளங்கோவனின் மேடை நாடகமும் ஸ்டார் கணேசனின் நிழல்படக் கண்காட்சியும் இடம்பெரும். 'வல்லினம்'இதழின் புதிய முயற்சி.முதல் முயற்சி. ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்.


நேர்காணல் முடிந்தவுடன் இருக்கையை விட்டு எழும்போதுதான் நிம்மதியாக இருந்தது. இரண்டாவது முறையாக இருக்கையை விட்டு எழும்போது ஏற்பட்ட நிம்மதி உணர்வு அது. முதல் அனுபவம் லண்டன் நகரில் 'தீபம்' தொலைக்காட்சிக்காக இளைய அப்துல்லா நேர்காணல் செய்தபோது ஏற்பட்டது. அதுவும் இதே போன்ற சுழலும் இருக்கைதான்.


இது போன்ற இருக்கைகள் எங்கிருந்து இவர்களுக்குக் கிடைக்கின்றன என தெரியவில்லை. தெரிந்தாலாவது சில தலைவர்களுக்கு இந்த இருக்கையை பரிசளிப்பது பற்றி யோசிக்கலாம்.


ம.நவீன்

No comments:

Post a Comment