Thursday, April 23, 2009

ஓடுகாலியின் குரல்

வணக்கம். 1)
"வி.ம." அதாவது விமர்சன மன்னன் என பேரும் புகழும் எடுத்த பழைய நண்பர் யுவராஜன், பழைய கதைகளைக் கொஞ்சம் பேசியுள்ளார். பழைய நண்பர்களால் பழைய கதைகளைத்தானே நினைவுக் கூர முடியும். அதுவொரு அழகிய நிலாக்காலம்...

நான் மலேசிய அறிவுமதியாக உலா வந்த காலம். அப்போதே யுவராஜன் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக, குருவாக இருந்தார். அவரை நான் முதன்முதலில் சந்தித்தது, தமிழ்ப்பேரவையின் தலைவர் பதவிக்கான தேர்தல் அன்று, இடம்கூட அறிவியல் புல வளாகம் என்று இன்றும் ஞாபகம். ஏனெனில் அந்த தேர்தலில் நின்று பெரும்பான்மை வாக்குகளில் தோற்றுப்போனவன் இந்த மலேசிய அறிவுமதி.தோற்ற பின்னர் நான் என்னை அறிவுமிதியாக நினைத்துக் கொண்டேன். ஆனால் அடிக்கடி சந்தித்துக் கொண்டது அண்ணன் யுவராஜன் சொன்னதைப் போல தமிழ் நூலகம்தான், அப்போதுதான் நான் கொஞ்சம் கொஞ்சம் பேனா பிடித்து நடந்துக் கொண்டிருந்த காலம். "இடைப்பட்டவை" என்ற பாலர் பள்ளி மாணவர்களின் தரத்திற்கு கிறுக்கிய ஒரு காலம்.


நான் அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஒள,ஃ என தமிழின் ஆதார எழுத்துக்களைப் பயின்று வந்த காலம்.அப்போதே "வி.ம" யுவராஜன், குட்டி ரேவதியின் முலைகள் நூலைத் தேடி வந்து கொடுத்தார். கலாப்பிரியா, மாலதி மைத்ரி,யூமா.வாசுகி, ஆதவன் தீட்சண்யா என இன்னும் சிலரது நூட்களும் அவர் கொண்டு வந்து கொடுத்த கூடையில் இருந்தது. அ,ஆ,எழுதிக்கொண்டிருந்தவனுக்கு எடுத்த எடுப்பிலேயே அவற்றை வாசிக்க முடியவில்லை. கூடையைத் தூக்கிப் போட்டு விட்டு போனவன் தான்.ஆகக் கடைசியாக மலேசிய வைரமுத்து நவீனின் சகோதரியின் திருமணத்தில் சந்திக்க நேர்ந்தது "வி.ம" யுவாவை.

ஆனால், எனது குருவை நான் தான் ஒழுங்காகப் புரிந்து கொள்ளவில்லை. அவர் கரைத்துக் குடித்து மண்டையில் சேர்த்து வைத்திருந்த அறிவுக்கு ஏற்ப என்னால் எழுதமுடியவில்லை. அவரைத் திட்டமிட்டும் திட்டமிடாத போதும், பார்க்க நேரும் போதெல்லாம், என்ன கிறுக்குகிறாய் என்று கேட்டுத் தொலைப்பார். இருந்தாலும் போனால் போகட்டும் குருதானே என நானும் தொடர்ந்து சந்தித்துத் தொலைத்தேன். ஆனால் போக போக அவரது அறிவுத் தொல்லை தாங்க முடியவில்லை. அவர் கோணங்கியை வாசித்து விட்டு, அவரைப் போல் அல்லது அவரது தரத்திற்கு நாங்கள் எல்லாம் எழுத வேண்டும் என எதிர்பார்த்தார். எனக்கு எழுதவே வராது. பின்னர் குருவின் மோட்டாரைக் கண்டால் வேறு பாதையில் செல்வேன். குருவைக் கண்டால் ஒதுங்கி விடுவேன்.குருவிடம் பேசும் போது, எனக்கு தலை வலிக்க ஆரம்பித்ததால் நான் அவ்வாறு செய்யத் தொடங்கினேன்.

என்னால், தமிழகத்தில் உள்ளவர்கள் போல் எல்லாம் எழுத முடியாது. என்னால் என்னைப் போலவே மட்டுமே எழுத வருகிறது.நான் என்ன செய்ய? அ,ஆ,இ,ஈ எழுதி, இன்று ஒரு வாக்கியத்தை முழுமையாக எழுதும் அளவு தேறியிருக்கிறேன் என எனது வாக்கிய வெளியீட்டு நிகழ்வில், எழுத்தாளர் ம.சண்முகசிவா கூறியிருந்தார். நிச்சயம் என்றாவது ஒரு நாள் இந்த "ஓடுகாலி" பயல், ஒரு கட்டுரை எழுதி விடுவேன்.அப்போது தெரிவுபடுத்துகிறேன்.எழுத்துப்பிழையைக் கண்டுபிடியுங்கள்..அல்லது இப்போது வந்திருக்கிற முகுந்தராஜ் அல்லது வேறு சிலரருடன் ஒப்பிட்டு, என்ன எழுதியிருக்கிறான் இந்த மலேசிய அறிவுமதி என ஊர்கூடி பேசுங்கள். அல்லது இலக்கிய வட்டத்திலிருந்து சிவம் வெகுதூரம் சென்று விட்டார் என ஒப்பாரி வையுங்கள்.

அகிலன்( நம்மூர்) ஒரு நல்ல கவிதை எழுதி விட்டார். நீங்கள் எப்போது எழுதப் போகிறீர்கள் எனும் எனது குருவின் அந்நாள் கேள்வி இன்னும் என் மனதில் உள்ளது. சரி அகிலன் எங்கே? சிவத்தைத் தேடுங்கள். வருங்காலத்தில் குருவாக எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு நான் கேட்டுக் கொள்வதெல்லாம், சிஷ்யப் பிள்ளைகளை நன்றாக வளருங்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் ஒப்பிடாதீர்கள் பின்னர், ஓடுகாலி சிவத்தைப் போல, எங்கேயாவது ஓடி விடுவான். அப்போது ஓடிவிட்டான், தொலைந்து விட்டான் என்றெல்லாம் சொல்லாதீர்கள் பந்தாவாக. விரட்டி விட்டேன்...தொலைத்து விட்டேன் என ஒரு துளி கண்ணீரையாவது வடித்துத் தொலையுங்கள். என்னைப் போல, குருவிடம் திட்டு வாங்கிக் கொண்டு ஓடிப் போன சிவாவின் கதையை நீங்கள் கேட்க வேண்டும். இன்று நான் ஒரு வாக்கியம் எழுத கற்றுக் கொண்டேன் என்றால் அந்த புகழும் பெருமையும் எனது குருவைத்தான் சேரும். நாளை நான் ஒரு பத்தி, ஒரு பக்கம், ஒரு கட்டுரை எழுத முடிந்தால், அந்த பெருமையும் எனது குரு "வி.ம." யுவா அவர்களைத்தான் சேரும்.
2)

ஓடி விட்டேன் என்று சொல்லாதீர்கள். உங்கள் அளவுக்கு எழுத முடியாது அது உண்மை. ஆனால் எனது அளவுக்குத்தான் என்னால் எழுத முடியும்.அதுவும் உண்மை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வாசிப்பதற்கு அஞ்சி ஓடியாதைப் போல என்னைச் சித்தரித்து, உங்களை ஒரு மாமேதை போல காட்டிக்கொண்டுள்ளீர்கள். உண்மையில் இன்னும் உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆணவத்தை-தான் காண முடிகிறது.

அப்படியே ஓடினாலும், அவன் அவனுக்கு என்ன என்ன பிரச்சனைகள் என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.. கொஞ்ச காலம் ஒருவனைக் காணவில்லை என்றால் அவன் வெகுதூரம் சென்று விட்டான் என அவதூறு பேசாதீர்கள். காணமல் போனவன், அடிபட்டு மருத்துவமனையில் இருக்கலாம். இப்போது நினைவுக்கு வரும் கிளைச்சம்பவத்தை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

ஆக மொத்தத்தில், உங்களைக் கண்டுதான் நான் ஓடியிருக்கிறேன். நீங்கள் துரத்தவில்லை?நாயைக் கல் எடுத்து துரத்தாத குறையாய் நீங்கள் துரத்தியது உங்களுக்கு நினைவுக்கு வராது..கல்லடி பட்ட நாய்க்குத்தான் வலியும் வடுவும்.விரட்டியவருக்கு இருக்காது. அன்றிலிருந்து இன்று வரை அதே வாதம். உங்களைப் பெரிதுப்படுத்தி, உங்களை மேன்மைப்படுத்தி அடுத்தவரை மட்டம் தட்டும் போக்கு என்னோடு முடியட்டும்.

குறள் 129 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

குட்டி ரேவதியை@மேலும் சிலரை வாசிக்க இயலாத,
ஓடுகாலிப் பயல்
சிவம் த/பெ பாலன்
அ.எண் : 780725-08-5997 012 2625892

No comments:

Post a Comment