Monday, March 23, 2009

இறுதியாய்...

மறந்து விடக்கூடும் என்பதால் முதலிலேயே ஒரு மன்னிப்பு கேட்டாக வேண்டும்...

'இந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து ஒரு கவிஞரை அழைத்து வந்து இந்த நண்பர் படுத்தியபாடும் அடித்தக் கொள்ளையும் நினைவிற்கு வருகிறது' என கடந்த வாரம் எழுதியிருந்தேன்.அதில் 'அடித்தக் கொள்ளை'என்ற சொல்லை பிரயோகித்தமைக்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். அந்தச்சம்பவத்தை நான் நேரில் இருந்து பார்க்காத நிலையில் சம்பந்தப்பட்ட சிலரின் வாய் வழி வாக்கு மூலத்தால் ஏற்பட்ட கோபம் அது. எப்படி இருப்பினும் 'அடித்தக்கொள்ளை' என்பது மிகவும் கனமான சொல்லே. எந்த ஆதாரங்களும் இல்லாத காற்றில் கடந்த சொல்.

பாலமுருகன்,
எழுத்தாளனுக்கு கோபம் தேவைதான்.அது அறச்சீற்றமாக இருப்பது நலம்.(நிச்சயமாக நான் அறிவுரை கூறவில்லை.) எனக்கு மீண்டும் மீண்டும் டாக்டர் சண்முகசிவா போன்றவர்களினால் வழங்கப்படும் ஆலோசைனைகள். உங்கள் எதிர்வினையில் இருந்தவை உங்களுக்கான தனிப்பட்ட கோபம். அது சமூகத்துக்கானதன்று. அதன் விளைவு "உங்களின் போலி முகத்திரையையும் என்னால் கிழிக்க முடியும் மஹாத்மன். அமைதி காப்பது நல்லது என்று இருக்கிறேன். நவீன் குறித்து நீங்களே அவர் பால் உள்ள கடுப்புகளை என்னிடம் சொல்லியிருக்க்கிறீகள்" என மிகவும் கீழிறங்கி நீங்கள் பேசும் படி ஆகியுள்ளது. இது மிகவும் ஒரு கீழான செயல் அல்லவா!? யாருக்கு யாரின் மேல் வெறுப்பு இல்லை? கடுப்பு இல்லை? அத்தனையும் மீறி ஏதோ ஒரு சிறு நம்பிக்கையிலும் அன்பிலும்தானே இன்றளவும் உறவுகள் விரிகிறது.

நான் உங்கள் கருத்தில் வைத்த எதிர்வினை மூன்று...

1.விபச்சாரியின் யோனி....அது குறித்து நிறைய விவாதித்து விட்டோம். அதையொட்டி எனது இறுதி கருத்தும் ஒரு கேள்வியும்... "இன்றைய நவீன சொல்லாடல்களின் மகத்துவமே அதன் உள் அடுக்குகளும் முரண்பட்டு பிளவுப்படும் அதன் நுண் வெளிப்பாடுகளும்தான். சமூகம் குறித்து தனிநபர் குறித்து உலகம் குறித்து பயன்படுத்தப்படும் யதார்த்த சொல்லாடல்களை மீறிய ஒரு கட்டமைப்பு இப்பொழுதெல்லாம் மிக துணிச்சலாகக் கையாளப்படுகின்றன. அதை உடனே புரிந்துகொள்ள சில கட்டுடைப்புகளைச் செய்து படைப்பாளன் சொல்ல வரும் செய்தியை அடைய சில நுண் முயற்சிகளை நாம் மேற்கொண்டாக வேண்டும்"என்றீர்கள்.

அதாவது உங்கள் விபச்சாரியின் யோனி குறித்த சொல்லாடல் பல உள் அர்த்தங்களைக் கொண்டுள்ளது என்றீர்கள்.சரி.ஆனால் மற்றொரு கடிதத்தில் உங்களின் வாக்குமூலமாக.... "தமிழ் சமூகத்தின் பின்னனியிலிருந்து, மரபு கவிஞர்கள் ஒரு விபச்சாரியின் யோனிக்குக் கொடுக்கும் மதிப்பைக்கூட. . அவர்கள் பொருத்தவரை விபச்சாரியின் யோனி இழிவானது. . காரணம் இந்தச் சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பிலிருந்து விபச்சாரி என்பவள் அங்கிக்கரிக்கப்படாமல் போய்விட்டாள். இங்கே நவீன எழுத்தாளனின் படைப்பும் அதைவிட ஏறக்குறைய அதே அளவில்தான் வைத்து மதிப்பீடபடுகின்றன. நான் எனது வரியில் சொல்ல வந்த ஒப்பீடும் இதேதான்." என்கிறீர்கள்.

நீங்கள் விபச்சாரியின் யோனிக்குத் தரும் அர்த்தம் இதுதான் எனும்போது இதில் எங்கே இருக்கிறது சொல் அரசியலும்...எதிர் அரசியலும்?ஒரு வேலை எனக்குதான் புரியவில்லையோ.(மீண்டும் கோவை ஞானியை நான் மறு வாசிப்பு செய்ய வேண்டும் போல.)

2.எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டும் நண்பரினால் தமிழ் சமூகத்தின் மீது தீராத வருத்தம் ஏற்பட்டதாகக் கூறினீர்கள்.ஓர் இதழ் ஆசிரியராக அது போன்றவர்களுக்கு நான் நன்றி சொல்வேன்.முற்றுப்பிழை தவிர்ப்பது இயலாதக் காரியம்தான்.ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டால் ஓரளவு சரிபடுத்தலாம். ஒவ்வொரு மாதமும் நான் 'வல்லினம்' வெளிவந்ததும் வருந்தும் விஷயம் இதுதான். எழுத்து பிழைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது நமது கடமை. அதற்கு சமூகத்தின் மேல் நாம் வருத்தம் கொள்ள வேண்டாமே.(அவ்வளவு ஏன் சாதாரண இந்த புளோகில் எழுதும் பத்தியில் கூட நம்மால் எழுத்துப் பிழையை முழுமையாக அகற்ற முடியவில்லை.)

3.தமிழக எழுத்தாளர்களுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் பற்றி கூறினீர்கள். இன்று மலேசிய பாடல்கள் தமிழக சினிமா பாடல்களுக்கு நிகராக இசை அமைக்கப் படுகின்றன. நமது நாட்டிலும் நல்ல கலைஞர்கள் உருவாகி வருகின்றனர். இந்த வெளிபடல் எல்லா கலை துறைகளிலும் நிகழும். நம்மிடம் ஒரு வகையான அடிமை புத்தி உள்ளது. அது எல்லோர் போலவும் எனக்கும் முன்பு இருந்தது. நமது எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் உலக அளவில் செல்ல நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.இது குறித்து தெளிவான பார்வை நமக்கு தேவைப்படுகிறது.

சில கேள்விகளையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அதில் பிரதானமாக..."இத்தனை வசதி வாய்ப்பு இருந்து நம்மால் நமது படைப்புகளை வெளி உலகிற்கு கொண்டு செல்ல முடியாதது ஏன்?" "தமிழக சிற்றிதழ்கள் முன்பு அரவே கண்டு கொள்ளாதா மலேசிய படைப்பாளிகளுக்கு இப்போது முக்கியத்துவம் தருவது ஏன்?" இதில் விவாதிக்க நிறைய உண்டு.அதற்கு கொஞ்சம் இலங்கைத் தமிழர்களின் பார்வையும் அவசியம்.

பல ஆண்டுகளாக தமிழக ஊடகவியலாளர்களால் வெளிபட முடியாமல் இருந்தவர்கள் அவர்கள்.இன்று சிற்றிதழ்கள் அவர்களைத் தேடி ஓடுகின்றன.ஆயினும் இத்தகைய விவாதங்களுக்கு இடம் தராமல்...தங்கள் ஆசிரியர் குழுவால் சில தீர்மாணங்களைக் கொண்டுவந்துள்ளீர்கள்.அவற்றில் முக்கியமானது தமிழக எழுத்தாளர்களுக்குத் தரும் முக்கியத்துவம் குறித்தும் அடங்கும். உங்களுக்கு நினைவிருக்கலாம்...அநங்கம் தொடங்கப்பட்டபோது நான் கூறினேன்."அநங்கம் ஒரு சிற்றிதழின் தன்மையைப்பெற வேண்டும்.'வல்லினம்' ஒரு இடைநிலை ஏடு. அதைக்காட்டிலும் மிகத்தீவிரமான போக்கை அநங்கம் கொண்டிருத்தல் அவசியம் (இங்கு நீங்கள் சிற்றிதழுக்கும்,இடை நிலை ஏட்டுக்குமான பேதத்தை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.)"

எனவே...தாங்கள் தங்கள் ஆசிரியர் குழுவினால் தீர்மானித்த நிலை குறித்து நான் கேள்வி எழுப்ப விரும்பவில்லை. நீங்கள் குறிப்பிட்ட படி அது உங்கள் சிற்றிதழின் தனிபட்ட நிலைபாடுகள் சுதந்திரம் சார்ந்தவை. எனக்கும் தனிப்பட்ட நிலைபாடு உள்ளதால் நான் ஆலோசகர் குழுவிலிருந்து விலகிக் கொள்கிறேன். யார் வந்தாலும் போனாலும் அநங்கம் மேலும் வளரும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. முக்கிய குறிப்பு :அப்புறம் 'நான் கடவுள்' குறித்த எனது கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில்களுக்கு நன்றி.ஆனால் அவை கேள்விகள் இல்லை நண்பா.எனது விமர்சனம்தான்.
பாண்டிதுரை அவர்களுக்கு...
வல்லினத்தை தங்களிடம் முதன் முதலாக இம்முறைதான் விற்பனை செய்ய உதவி கேட்டிருந்தேன்.25 இதழ்கள்.அவற்றில் ஐந்தை தவிர மற்றவைகளுக்குத் தாங்கள்தான் பணம் செலுத்துகிறீர்கள் என எனக்குத் தெரியாது.தங்களுக்கு அந்தச்சிரமம் கொடுத்தமைக்கு வருந்துகிறேன்..இனி உங்களுக்கு வல்லினம் விற்கும் சிரமம் தர மாட்டேன்.

மகாத்மனுக்கு கூற ஒன்றும் இல்லை...ஒரு புன்னகையைத்தவிர.

ம.நவீன்

No comments:

Post a Comment