Saturday, May 30, 2009

இர‌ண்டு க‌விதை

காதலி 1

காமம் வெல்வது பற்றி
காதலிசொல்லிக்கொண்டிருந்தாள்

முதலில் தனது முகம் மறக்கச் சொன்னாள்
அதில் துளைகள் அதிகம் இருப்பதாகவும்
அவைகளில் அழுக்குகள் வெளியேறக்கூடுமென்றாள்

உதடுகள் பற்றி கேட்டேன்
சுரக்கும் எச்சில் பற்றியும்
கிருமிகள் பற்றியும்
நினைவு படுத்தினாள்

என் பார்வையை விளங்கிக்கொண்டவளாக
மார்பை பசு மடியுடன் ஒப்பிட்டாள்
அத்தனையும் ஊளை சதை என்றாள்

என்னைத்தொடர விடாமல்
தனது மூத்திரம் பற்றியும்
அதன் துர்வாடை
ஒரு பிணத்திற்கு சமமானது என்றாள்

என் பார்வையில் நம்பிக்கை இழந்தவள்
பிரத்தியேக திரவம் ஒன்று தடவி
தோலை சுருங்கச் செய்தாள்

ஒரு தீக்குச்சியில்
தன்னை எரித்துசாம்பலாக்கினாள்

நான்
பத்திரமாய் விழுந்துகிடந்த
அவள் காமத்தை கையில் ஏந்திச் சென்றேன்

காதலி 2

நீ தான் தொடங்கினாய்
என நான் தப்பித்துக்கொள்கிறேன்

அதன் மூலம் உன்னில்
குற்றவுணர்வை ஏற்றுகிறேன்

உன் நடத்தையில் உமிழ்கிறேன்

தொடர்ந்து புலம்பி
இரக்கம் ஏற்படுத்த முயல்கிறேன்

கரிக்கும் இரத்தம் உமட்டும் போதெல்லாம்
உன்னையும் வாந்தியெடுக்கிறேன்

எதுவும் முடியாமல் போக
கடிதம் எழுதுகிறேன்
சொற்களை நேர்ப்படுத்துகிறேன்

என் நோய்க்கு உன் பெயரை எதிர்ப்பார்க்கிறேன்

இதுதன் இறுதியென
உன் எண்களை இருவதாவது முறையாக அழுத்துகிறேன்

மன்னிப்பு கேட்கிறேன்

அப்போது நீ மன்னித்து
சில நிமிடங்கள் கடந்திருக்கும்.

No comments:

Post a Comment