பயணத்தின் சுகத்தை முதன் முதலாக சரவணன் எனக்கு போதித்தான்.எங்களுக்கு இலக்கு அவசியம் இல்லாமல் இருந்தது.பள்ளி நாட்களில் எங்களின் கண்களின் பட்ட எந்தக்காட்சியும் வெள்ளி,சனி கிழமைகளில் படக்கூடாது என்பது மட்டுமே எங்களுக்குள் நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம்.மோட்டாரில் ஏறி தூரம் செல்லச் செல்ல ஏற்படும் பரவசத்தை அனுபவிக்கையில் நாங்கள் பேசிக்கொண்டது குறைவு.அப்போது எங்கள் இருவரிடம் இருக்கும் மொத்தத் தொகையே பத்துவெள்ளியாகத்தான் இருக்கும்.மோட்டாருக்கு எண்ணை நிரப்ப 3 வெள்ளி.சாப்பிட ஆளுக்கு 3 வெள்ளி.வீடு திரும்புகையில் ஆளுக்கு 1 வெள்ளி ஐஸ் கச்சாங்.
பினாங்கு எங்கள் பயணங்களில் முதல் இலக்காக இருக்கும்.லுனாஸிலிருந்து 20 நிமிடங்கள்.(நமது உயிரின்மீது பயம் இல்லாமலும் அடுத்தவன் உயிரின் மீது இரக்கம் இல்லாமலும் மோட்டார் ஓட்டினால்.)கடலும் கடல் சார்ந்த பகுதியும் மனதுக்கு தெம்பைத்தரக் கூடியவை.ஒவ்வொரு நாளும் எங்கிருந்து எவன் வந்து அடிப்பான் என்ற பாதுகாப்புக்குறிடத்தே சிந்தித்த எங்களுக்கு திறந்த வெளி பெரும் மன அமைதியைக் கொடுக்கும்.இப்போது நினைத்துப்பார்த்தாலும் அது போன்ற தருணமெல்லாம் நானும் சரவணனும் நெடிய மௌனத்தை அனுமதித்த காரணம் புரியவில்லை.அது கொஞ்சம் ஆழ்ந்து சுவாசிக்கத் தேவைப்பட்ட மௌனமாக உள்ளது.
அநேகமாக எங்கள் பயணங்களின் பட்டியலில் பாலியல் தொழிலாளிகளின் பகுதி முக்கிய இடம் பிடித்துவிடும்.பட்டவர்த்தில் அதற்கென்று தனி இடம் இருந்தது.முன்பு அங்கு 'ரூமா தாங்கா' என எழுதப்பட்டிருக்கும்.இப்போது கொஞ்சம் மாறி 'ஹாட்டல் தாய்' என்றும் 'ஹாட்டல் பாங்கோக்' என்றும் எழுதப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். அது போன்ற இடங்களில் நுழையும் போது நான் தலை கவசம் போட்டுக்கொள்வேன்.சரவணன் எதையும் அணியாமல்தான் வருவான்.'உன்னை உனக்குத் தெரிஞ்ச யாராவது பாத்துட்டா'? என ஒருதரம் அவனைப் பார்த்துக் கேட்டேன்.'உனக்கு என்னாடா இங்க வேலன்னு நான் அவனைப் பார்த்து கேப்பேன்'என்றான்.
கையில் 10 வெள்ளியை வைத்துக்கொண்டு பாலியல் தொழிலாளிகளிடம் விலை விசாரிப்போம். அவர்கள் விலை அதிக பட்சம் 50 ரிங்கிட்டைத் தாண்டியதில்லை.விலை குறைப்பு நடக்கும்.அவர்கள் 40 வெள்ளிக்கு இறங்க மாட்டார்கள்.அந்த சம்பாஷனையின் நீளம் எங்களுக்கு அதிகம் தேவைப்பட்டது.சரவணன் மொழியில் சொல்வதென்றால் 'உருவத்தை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டால் வீட்டிற்குச் சென்று இலவசமாகவே உறவு கொள்ளலாம்.'
சில இடங்களில் 'பாப்பா ஆயாம்'எங்களை நெருங்க விடுவதிலை.பணம் வைத்திருப்பவனின் வாடையை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். ஏதாவது ஒரு விடுதியில் ரிட்டையர் ஆகும் வயதில் இருக்கும் பாலியல் தொழிலாளியிடம் அமர்ந்து அதிக நேரம் பேசுவோம்.அவர் அளிக்கக்கூடிய சேவை குறித்து விளாவாரியாக விசாரிப்போம்.அவர் தரக்கூடிய விளக்கம் அன்று நாங்கள் பேசி மகிழ போதுமானதாக இருக்கும்.
தொடரும்
No comments:
Post a Comment