Saturday, July 11, 2009

திற‌ந்தே கிட‌க்கும் டைரி...2


ச‌ர‌வ‌ண‌ன் என்றொரு ந‌ண்ப‌ன்...


'நீங்க‌ எழுத்தாள‌ராக‌ யார் கார‌ண‌ம்?' ,'இள‌ஞ்செல்வ‌ன் உங்க‌ளை எழுத்தாள‌ராக்கினாரா?' ,'எப்ப‌டி நீங்க‌ எழுத‌ ஆர‌ம்பிச்சீங்க‌?' எல்லா எழுத்தாள‌ர்க‌ளைப்போல‌வே நானும் இந்த‌க் கேள்வியைப் ப‌ல‌ த‌ர‌ம் ச‌ந்தித்துள்ளேன். என‌க்கு எழுத்தை அறிமுக‌ம் செய்த‌து என‌வோ இள‌ஞ்செல்வ‌ன்தான். ஆயினும் எழுத்தாள‌னுக்கான‌ அடிப்ப‌டை ப‌ண்பைப் போதித்த‌வ‌ன் என் ந‌ண்ப‌ன் ச‌ர‌வ‌ண‌ன்.


ச‌ர‌வ‌ண‌ன் மிக‌வும் ஆச்ச‌ரிய‌மான‌ ந‌ண்ப‌ன். ஒரு கைக‌ல‌ப்பில்தான் அவ‌னை நானும் என்னை அவ‌னும் அடையாள‌ம் க‌ண்டுகொண்டோம். ர‌த்த‌ம் ஒழுக‌ ப‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ ம‌லாய்கார‌ மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் த‌னித்து நின்றுகொண்டிருந்தான். அவ‌னிட‌ம் ப‌ய‌ம் இல்லை. இர‌த்த‌த்தைத் துடைக்கும் க‌ண‌த்தில் த‌ன்னை யாரேனும் தாக்க‌க்கூடும் எனும் எச்ச‌ரிக்கை உண‌ர்வு ம‌ட்டும் இருந்த‌து. அவ‌ன் அதுவ‌ரை ந‌ம்பிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ரும் தொலைவில் க‌ண்க‌ள் ம‌ட்டும் வெளித்தெரிய‌ நின்ற‌ன‌ர். முத‌ன்முதலாக‌ ஆயுத‌ம் எடுப்ப‌தின் ப‌த‌ற்ற‌த்தை உண‌ர்ந்தேன். இஷ்ட‌ப்ப‌டி வீச‌ அந்த‌க் க‌ட்டை அத்த‌னை தோதாக‌ இல்லை. ஆனால் அடுத்த‌வ‌னின் ப‌ய‌ம் ஒருவ‌கை த‌ன்ன‌ம்பிக்கையையும் திமிரையும் மூட்டிய‌து.


எல்லாம் முடிந்த‌பின் ச‌ர‌வ‌ண‌னிட‌ம் கேட்டேன்.
'ஏன் ச‌ண்டை?'.
'ப‌றைய‌ன்னு சொன்னான் அதான்...அத‌ சொல்ல‌ அவ‌ன் யாரு வ‌..........டி'
அந்த‌ நிமிட‌ம் நானும் ச‌ர‌வ‌ண‌னும் உயிர் தோழ‌ர்க‌ளாகிவிட்டோம். என்னைச் சார்ந்திருந்த‌ ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌மும் அவ‌னைச் சார்ந்திருந்த‌ ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌மும் கை குலுக்கிக்கொண்ட‌து. ஏற‌க்குறைய‌ 40 த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள் வெறுப்புக‌ள் அற்று ஒன்றிணைய‌ நாங்க‌ள் இருவ‌ரும் கார‌ண‌மாக‌ இருந்த‌தை இப்போதும் கூறி பெருமை ப‌டுவ‌துண்டு. அத்த‌னை கால‌மும் வேற்று இன‌த்து மாண‌வ‌ர்க‌ளின் புத்த‌க‌ப்பை சும‌க்க‌வும் அவ‌ர்க‌ளின் விர‌த‌ கால‌ங்க‌ளில் திருட்டுத்த‌ன‌மாக‌ உண‌வு வாங்கித்த‌ர‌வும் அவ‌ர்க‌ள் வீட்டுப்பாட‌ங்க‌ளைச் செய்வ‌த‌ற்கு உத‌வ‌வும் கேட்கும் நேர‌த்தில் ப‌ண‌ம் கொடுக்க‌வும் ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌ட்ட த‌மிழ் மாண‌வ‌ர்க‌ளின் கைக‌ளுக்கு முத‌ன்முதலாக‌ ஆண்மை வ‌ந்திருந்த‌து.



ப‌ள்ளி முழுதும் இது ஆச்ச‌ரிய‌த்தைப் ப‌ர‌ப்பியிருந்த‌து. த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள் ஒன்றிணைவ‌து அவ‌ர்க‌ள் க‌ன‌விலும் நினைக்காத‌ ஒன்று. அதிலும் மூன்றாம் ப‌டிவ‌த்தில் ப‌டிக்கும் முத‌ல் நிலை மாண‌வ‌னிலிருந்து க‌டை நிலை மாண‌வ‌ன் வ‌ரை ஒரே குழுவாகிக் கிட‌ந்ததும் ச‌ர்வ‌ சாதார‌ண‌மாக‌ ஐந்தாம் ப‌டிவ‌த்தில் ப‌யிலும் வேற்று இன‌ மாண‌வ‌ர்க‌ளை ஓட‌ ஓட‌ விர‌ட்டுவ‌தும் அவ‌ர்க‌ளுக்கு என்னையும் ச‌ர‌வ‌ண‌னையும் ந‌ன்கு அறிமுக‌ம் செய்திருந்த‌து.


ச‌ர‌வ‌ண‌ன் பெண்க‌ள் ம‌த்தியில் ஒரு க‌தாநாய‌க‌னாக‌வே வ‌ல‌ம் வ‌ந்தான். ச‌ண்டை வ‌ரும் கால‌ங்க‌ளில் முத‌ல் மாடியிலிருந்து அவ‌ன் கீழே குதித்து க‌ள‌த்தில் நிற்ப‌து அவ‌னைத் த‌னித்துக்காட்டிய‌து. அவ‌ன் ச‌ண்டையில் ஒரு நேர்மை இருந்த‌து. அவ‌னிட‌ம் வ‌ந்து முறையிடுப‌வ‌ர்க‌ளிட‌ம் நியாய‌ம் யார் ப‌க்க‌ம் என்ப‌தை ம‌ட்டுமே முத‌லில் பார்ப்பான். த‌மிழ‌ர்க‌ளை அவ‌ம‌திக்கும்ப‌டியான‌ சொற்க‌ள் இருந்தால் அன்று எங்க‌ளுக்குப் பாட‌ம் இல்லை என்று பொருள்.

- தொட‌ரும்

No comments:

Post a Comment