காலப்போக்கில் எனக்கும் இந்த சூழல் பழகிவிட்டது. கொய்தியோ மணியம் போதையில் ஒருவராகவும் தெளிந்த நிலையில் வேரொருவராகவும் காட்சியளித்தார். தெளிவாக இருக்கும் பொழுதுகளில் கொய்தியோ மணியம் தாத்தாவிடம் பொழுதைக்களிப்பது சுவாரசியமானது. அவர் சில மூலிகைகள் குறித்து அறிந்து வைத்திருந்தார். கால் கட்டைவிரலால் புற்களைத் தடவியபடி நடப்பவர் திடீரென 'தெ...இதுதான்'என சிறிதாய் இருக்கும் ஒரு வகை இலையைப் பறித்து மெல்வார். அந்த இலையில் உள்ள பால் இரத்தத்தில் கலக்கும் போது அது வெளிபடுத்தும் வாடை பாம்புகளை அச்சம் கொள்ளச்செய்யும் என்பார்.
கொய்தியோ மணியம் வேட்டைக்குப் போவதைப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும். வெரும் லாஸ்டிக் மட்டுமே அவர் ஆயுதம். கூடவே இரண்டு நாய்கள் ஓடும். அரைகால் சட்டை மட்டுமே அணிந்திருப்பார். வெற்றுடல். சிறு தழும்புகூட இல்லாமல் அவர் சுற்றிவரும் காட்டிலிருந்து போனமாதிரியே மூட்டைநிரைய உடும்புகளை அள்ளிக்கொண்டு வருவார். காடு அவருக்கு பழக்கமான பிரதேசம். காட்டுக்குள் நுழையும் போது அவர் மது அருந்தி நான் பார்த்ததில்லை.
ஒரு முறை அவரோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் போது கத்தி வீசுவது குறித்து என்னிடம் பேச ஆரம்பித்தார். கத்தி நம்மை நோக்கி வருகையில் அதை எப்படி கையாள்வது என அவரே வீசி அவரே தடுத்தும் காண்பித்தார். சத்தத்துடன் இடது கையால் கத்தியை வீசி லாவகமாக ஆள்காட்டி விரலுக்கும் நடு விரலுக்கும் நடுவில் அதை அடங்கச்செய்வதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு கத்தியை என் கையில் கொடுத்து வீசச் சொன்னார். கைகள் நடுங்கின. கத்தி தன்னால் கீழே விழுந்தது.
கொய்தியோ மணியம் 'பொட்டை' என்றார்.
தொடரும்
No comments:
Post a Comment